திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களது மகன், மகளை மிகப்பெரிய அளவில் படிக்க வைத்து கல்வியை கொடுத்தாலும் அவர்கள் வளர்ந்து ஆளான பிறகு அவர்கள் சினிமாவை தேர்ந்தெடுத்தால் அதற்கு பெரிய அளவில் தடையாக நிற்பது இல்லை. இன்னும் சொல்லப்போனால் தங்களது வாரிசுகளையும் தங்களைப் போலவே சினிமா துறையில் தாங்களே வளர்த்து விடவும் தயாராக இருக்கின்றனர், அந்த வகையில் மலையாளத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், பஹத் பாசில் போன்றவர்கள் வாரிசு நடிகர்கள் என்கிற அடையாளத்துடன் சினிமாவிற்குள் நுழைந்தாலும் தங்களது தனி திறமையால் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டனர்.
அதேபோல நடிகர் மோகன்லாலின் மகனும் படித்துவிட்டு டைரக்ஷன் மீது இருந்த ஆர்வத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவியாளராக சேர்ந்து டைரக்ஷன் கற்றுக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரும் தந்தையைப் போலவே நடிகராக மாறி இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரைப் பொறுத்தவரை படங்களில் நடிப்பதற்கு பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. உலகம் எங்கும் சுற்றி திரிவதில் தான் அவருடைய விருப்பம் இருக்கிறது.
சமீபத்தில் மோகன்லாலிடம் அவரது மகன் இப்படி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாதது குறித்து கேட்கப்பட்ட போது அதற்கு பதில் அளித்த மோகன்லால், “பிரணவ் எந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என யாரும் அவரை கட்டாயப்படுத்தவில்லை. ஒரு காலகட்டத்தில் பிஸியாக நடித்து வந்த சமயத்தில் பேசாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விடலாமா என்று நானே கூட யோசித்தேன். காரணம் எனக்கும் இதே போல உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு அலைந்து திரிந்து சுற்றிப் பார்க்க வேண்டும், ஒரு தேசாந்திரி போல திரிய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் என்னால் அது முடியவில்லை. இப்போது என்னுடைய ஆசையையும் சேர்த்து என் மகன் நிறைவேற்றி வருகிறார் என்பதை பார்க்கும்போது சந்தோசமாகவே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.