பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

சோழவந்தான் : மதுரை, சோழவந்தான் அருகே தென்கரையில் பழம்பெரும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் நுாற்றாண்டு மற்றும் சிலை திறப்பு விழா 2 நாட்கள் நடந்தது.
தென்கரை அக்ஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. அவரது பேரன் ராஜேஷ் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். வீட்டின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியில் நடிகராக, பாடகராக அவர் பெற்ற விருதுகள், விழாக்கள், வாழ்க்கை குறித்த போட்டோக்களை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
மாலையில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குழுவினரின் 'சாருகேசி' என்ற இசை கலைஞர்கள் பற்றிய நாடகம் நடந்தது. நடிகர் செந்தில் உட்பட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

இரண்டாம் நாளான நேற்று காலை வலையபட்டி சுப்பிரமணியம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. டி.ஆர்.மகாலிங்கம் மற்றும் கோமதி மகாலிங்கம் தொண்டு அறக்கட்டளை சார்பில் நிறுவிய மகாலிங்கம் சிலைத் திறப்பு விழாவை பின்னணி பாடகி சுசீலா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவர் ராஜேஷ், நடிகர்கள் சந்தானபாரதி, சச்சு, பார்வதி, சீர்காழி சிவசிதம்பரம் சிலையை திறந்து வைத்தனர்.

'இன்றைய இளைஞர்களையும் டி.ஆர். மகாலிங்கத்தின் 'செந்தமிழ் தேன் மொழியாள்' பாடல் கவர்ந்துள்ளது' என நடிகர் நாசரும், 'எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திற்கு முன் சினிமாவில் நடிகர், பாடகர் இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என உச்சத்தில் இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்' என ராஜேஷூம் பேசினர்.
பாடகி சுசீலா சில பாடல் வரிகளை விழாவில் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார். தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா 'செந்தமிழ் தேன்மொழியாள்' பாடலுக்கு நடனமாடினார். ஏற்பாடுகளை ராஜேஷ் குடும்பத்தினர் செய்திருந்தனர்.




