பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு |
தொழில்நுட்ப வசதிகள் பெரிய அளவில் வளர்ச்சி காணாத 1960களின் ஆரம்பத்தில் புதுமை இயக்குநர் சிவி ஸ்ரீதர் தனது படக் குழுவினரோடு காஷ்மீர் சென்று, பெரும்பாலான காட்சிகளை அங்கு தங்கியிருந்து 52 நாட்களில் படமாக்கிய திரைப்படம் தான் “தேன்நிலவு”.
ஸ்ரீதரின் “சித்ராலயா” தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் மற்றும் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையோடு வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா, எம் என் நம்பியார், வசந்தி பிஏ, கேஏ தங்கவேலு, எம்.சரோஜா ஆகியோர் நடித்தனர். பிரபல பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான ஏஎம் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல்கள் அத்தனையும் தேன் போன்று இனிமையான ரகம்.
ஸ்ரீநகரில் இருந்து மிக தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கியிருந்துதான் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தது படக்குழு. காஷ்மீரில் எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் எடுத்து முடித்து, பின் சென்னை திரும்பி அவைகளை எல்லாம் பிரிண்ட் போட்டு பார்த்து, சரிவராத காட்சிகளை மீண்டும் காஷ்மீர் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது சாத்தியமற்ற ஒன்று.
இதனால் அதுவரை எடுத்த படச்சுருள்களின் நெகட்டிவ்வை சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணனிடம் தந்து, அவர் அதை எடுத்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை வந்து 'விஜயா லேபரட்டரி”யில் பிரிண்ட் போட்டு, மீண்டும் விமானம் மூலம் காஷ்மீர் சென்று கொடுத்துள்ளார். அங்கே படக்குழு தங்கியிருந்த கிராமத்தில் உள்ள ஒரு தியேட்டரில் அனுமதி பெற்று, அங்கு இரவுக் காட்சி முடிந்ததும் இரவு ஒரு மணிக்கு மேல் அந்த புரொஜக்டரில் இவர்கள் எடுத்த “தேன்நிலவு” படக்காட்சியை இயக்குநர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, ஜெமினிகணேசன், வைஜெயந்திமாலா, நம்பியார் ஆகியோர் திரையிட்டுப் பார்த்தனர்.
அதன்பின் அதிகாலை 3 மணிக்கு உறங்கச் சென்று, மீண்டும் காலை 6 மணிக்கு படப்பிடிப்பைத் தொடங்கி, திருப்தி தராத காட்சிகளை மறு படப்பிடிப்பு நடத்தி எடுத்து முடித்திருக்கின்றனர். இத்தனை சிரமங்களைக் கடந்து வந்துதான் இந்த “தேன்நிலவு” திரைப்படம் திரையில் தோன்றி நம்மை மகிழ்வித்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும் இத்தருணம், அன்றைய திரைக்கலைஞர்கள் தொழில் மீது காட்டிய அற்பணிப்பு எத்தகைய உன்னதமானது என்பது இதன் மூலம் நாம் அறியலாம்.