ஏஐ தொழில்நுட்பம் சினிமா துறையில் பெரியளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த நடிகர்களை திரையில் கொண்டு வருவதுடன், அவர்களின் குரல்களையும் கதாபாத்திரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'வேட்டையன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் 'பிரிவியூ' என்ற பெயரில் வெளியான டீசரில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் டப்பிங் பேசியிருந்தார். அவரது குரல், அமிதாப்புக்கு சரியாக வரவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனையடுத்து அமிதாப் கதாபாத்திரத்திற்கு ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் அவரது குரலையே பயன்படுத்த வேட்டையன் படக்குழு முடிவு செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலமாக இதனை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான பணிகள் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. ஹிந்தியில் அவரே டப்பிங் பேசியுள்ளார். அக்டோபர் 10ல் படம் வெளியாகிறது.