தென்னிந்திய சினிமாவின் ஆக்ஷன் நாயகியாக திகழ்ந்தவர் விஜயசாந்தி. இவர் கடந்த 1997ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு அந்த கட்சியில் இருந்து வெளியேறி கடந்த 2009ம் ஆண்டு பாரத் ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆனார். அதன் பிறகு தெலுங்கானா தனி மாநிலமானபோது அந்த கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார் விஜயசாந்தி.
அதன் பிறகு அந்த கட்சியில் ஏற்பட்ட அதிருப்திகள் காரணமாக பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் விரைவில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவில் தனக்கு போட்டியிட சீட் கிடைக்காததால் அந்த கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் 'பாரத் ராஷ்டிர சமிதியிடம் இருந்து தெலுங்கானா மக்களை காப்பாற்ற காங்கிரஸ் போராட வேண்டும்' என விஜயசாந்தி பதிவிட்டுள்ளார். இதனால் அவர் பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் விரைவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.