விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் மூன்றாவதாக உருவாக்கி வரும் படம் வெந்து தணிந்தது காடு. இந்தப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் சித்திக் நடிக்கிறாராம். வில்லன் என்றாலும் வழக்கமான பாணியில் அல்லாமல் சற்றே வித்தியாசமாக, அதேசமயம் தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு இடத்தை பெற்றுத் தரும் கதாபாத்திரமாக அதை உருவாக்கியுள்ளாராம் கவுதம் மேனன்.
மலையாள சினிமாவில் மம்முட்டி, மோகன்லால் படங்களில் தவறாமல் இடம்பெற்று வரும் நடிகர் சித்திக் தமிழில் ஏற்கனவே ஜனா, ரங்கூன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் அவை தமிழில் அவருக்கான அடையாளத்தை பெற்றுத்தரவில்லை. அந்தவகையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வில்லன் நடிகர் பாபு ஆண்டனியை த்ரிஷாவின் தந்தையாக நடிக்கவைத்து குணச்சித்திர நடிகராக மாற்றியது போல, இந்தப்படத்தின் மூலம் சித்திக்கிற்கும் தமிழில் தொடர் வாய்ப்புகள் கிடைக்க, கவுதம் மேனன் நல்ல வழி காட்டுவார் என நம்பலாம்.