1970ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான 'சிஐடி சங்கர்' படத்தில் அறிமுகமானவர் ஏ.சகுந்தலா. இப்படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டதால், அதன் பிறகு 'சிஐடி' சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானார்.
'படிக்காத மேதை', 'கை கொடுத்த தெய்வம்', 'திருடன்', 'தவப்புதல்வன்', 'வசந்த மாளிகை', 'நீதி', 'பாரத விலாஸ்', 'ராஜராஜ சோழன்', 'பொன்னூஞ்சல்', 'என் அண்ணன்', 'இதயவீணை' என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவிலிருந்து விலகிய பிறகு சீரியல்களிலும் நடித்து வந்தார். அதன்பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, நேற்று (செப்.,17) நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.