தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகத்திலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் ரஜினிகாந்த். உலக அளவில் தமிழ்ப் படங்கள் வெற்றி வாகை சூட முக்கியக் காரணமானவர். அவரை பல நாட்டு பிரபலங்களும் சந்தித்து வாழ்த்துவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது.
அந்த வகையில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பார்ரி ஓ பார்ரல், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அது பற்றி அவருடைய டுவிட்டர் தளத்தில், “நாடுகளுக்கு இடையில் உள்ள மக்களை ஒன்றுக்கொன்று இணைப்பதிலும், கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் சினிமாவுக்குத் தொடர்புண்டு. சாதனை நடிகரான ரஜினிகாந்தை சந்தித்துப் பேசியது அற்புதமானது. அவரது அடுத்த படமான 'ஜெயிலர்' படத்திற்காக எனது வாழ்த்துகளையும் தெரிவித்தேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.