ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியான படம் 'அமரன்'. அப்படத்துடன் வெளிவந்த 'பிரதர், பிளடி பெக்கர்' ஆகிய படங்கள் ஒரே வாரத்தில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன. ஆனால், 'அமரன்' படம் நான்கு வாரங்களைக் கடந்தும் நான்-ஸ்டாப் ஆக ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு சூர்யா நடித்து வெளிவந்த 'கங்குவா' படம் கூட ஒரு சில தியேட்டர்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும்தான் கொண்டிருக்கிறது.
'அமரன்' படம் இந்த நான்கு வாரங்களில் சுமார் 320 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் அதிக லாபத்தைக் கொடுத்த படங்களில் இப்படம்தான் முதலில் இருக்கும் என்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் டப்பிங் ஆகி அங்கும் இன்னும் பல தியேட்டர்களில் ஓடி வருகிறது. மொத்தமாக 90 கோடி வரை லாபத்தைக் கொடுத்துள்ளதாகத் தகவல்.