32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
‛நாம் கஷ்டப்பட்டு உழைத்தால் நம் வாய்ப்புகளை யாராலும் பறிக்க முடியாது' என்று தன்னம்பிக்கையோடு பேசுகிறார் சென்னையை சேர்ந்த நடிகை ஜனனிதுர்கா. இவர் விஜய் உடன் ‛மாஸ்டர்', அருள்நிதியுடன் ‛டி பிளாக்' படங்களில் கல்லூரி மாணவி கதாபாத்திரங்களில் நடித்து தற்போது ஹீரோயினாக உயர்ந்துள்ளார்.
இவர் கூறியதாவது: எங்களுடையது நடுத்தர குடும்பம். அம்மா தனியார் பள்ளி ஆசிரியை. நன்றாக படிப்பேன். பிளஸ் 2 பொதுத்தேர்வு பொருளியல் பாடத்தில் மாநிலத்தில் 2வது இடம் பிடித்தவள் நான். என் அம்மா, 'நீ வங்கியில் பணியாற்றுவதற்கான படிப்பை படிக்க வேண்டும்' எனக்கூறுவார். எனக்கு அதில் ஆர்வம் இல்லை. அம்மாவின் ஆசைக்காக பி.ஏ., பொருளியல் படித்து தனியார் வங்கியில் சில மாதங்கள் பணியாற்றினேன்.
பின் தொழில் தொடங்க ஆசை ஏற்பட்டதால் வங்கியில் லோன் வாங்கி மயிலாப்பூரில் 2019ல் சிறிய 'காபி ஷாப்' ஒன்றை தொடங்கினேன். நல்ல முறையில் வியாபாரம் நடந்தது. சில மாதங்களில் கொரோனா வந்தது. காபி ஷாப் காணாமல் போய்விட்டது. வீட்டிலேயே சில மாதங்கள் இருந்தேன்.
'கில்பாலு' எனும் குறும்படத்தில் தொடங்கி 15க்கு மேலான குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சில குறும்படங்களை ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் முன் திரையிட வாய்ப்பு கிடைத்தது.
அதை பார்த்த அவர் என்னை பாராட்டினார். அதன்பின் டிக்டாக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்கள் பதிவேற்றம் செய்தேன். அதைப்பார்த்து சினிமாத்துறையை சேர்ந்த ஒருவர் விஜய் நடிக்கும்' மாஸ்டர்' படத்தில் கல்லுாரி மாணவி கதாபாத்திரத்தில் நடிக்க உங்களுக்கு விருப்பமா எனக் கேட்டார். முதலில் நம்ப முடியவில்லை. ஆடிஷனில் பங்கேற்றேன். என்னை தேர்வு செய்தார்கள். அது தான் என் சினிமா வாழ்க்கைக்கான தொடக்கம். பின் ஷூட்டிங்கில் விஜய்யை பார்த்தது, அவருடன் நடித்தது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது.
அடுத்தடுத்து 2 படங்களில் ஒப்பந்தமானேன். கொரோனாவை காரணம் காட்டி அந்த வாய்ப்புகள் என்னை கைவிட்டது. மன வேதனையில் இருந்த என்னை அம்மா ஆறுதல்படுத்தினார்.
சில மாதங்களுக்கு பின்பு 'நோ குளு' எனும் தெலுங்கு ஷாட்பிலிமில் வில்லியாக நடித்தேன். அடுத்த கட்டமாக கடவுள் கொடுத்த வாய்ப்பாக அருள்நிதி நடித்த 'டி பிளாக்' எனும் படத்தில் நடித்தேன். அதுவும் எனக்கு வரவேற்பை பெற்று தந்தது. 2022ல் ஹன்சிகாவுடன் ஒரு படத்தில் கமிட்டாகி 2வது கதாநாயகியாக தற்போது நடித்து முடித்துள்ளேன்.
தற்போது 'ரத்தமாரே 'எனும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளேன். படமும் முடிந்தது. நடிகர் ஆர்யாவுடன் ஒரு படத்திற்கான ஷூட்டிங் ராமநாதபுரத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மூன்று படங்களும் இன்னும் வெளியாகவில்லை.
நான் வாய்ப்புகளை தேடி அலையவில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்புகளை மட்டும் சரியாக பயன்படுத்தி கொள்கிறேன். இந்த உலகில் நமக்கானது என்று ஒன்று இருந்தால் அது கட்டாயம் நம்மிடம் வந்து சேரும். ஆனால் அதற்கான உழைப்பையும் நாம் கொடுக்க வேண்டும்.
பல படங்களில் வாய்ப்பு வருகிறது. நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன். சீரியல்களிலும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வருகிறது. இப்போது திரைப்படங்களில் தான் என் முழு கவனமும் உள்ளது என்றார்.