32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
சென்னை: அரியவகை இரிடியத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்றுத் தருவது போல நடித்து, தொழில் அதிபரிடம், 26.20 கோடி ரூபாய் சுருட்டிய நடிகை ஜெயசித்ராவின் மகனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயசித்ரா 60. நடிகையான இவர், குறத்தி மகன், அரங்கேற்றம் உட்பட ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இவரது கணவர் கணேஷ், 62. தொழில் அதிபரான இவர், 2020, டிச., 4ல் இறந்தார். இவர்களது ஒரே மகன் அம்ரீஷ், 33; இசையமைப்பாளர். ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தன் தாய் இயக்கிய, நானே என்னுள் இல்லை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
அம்ரீஷ்க்கும், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த, நெடுமாறன், 68 என்பவருக்கும், 2013ல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் அதிபரான நெடுமாறன், படப்பிடிப்பு தளம் மற்றும் பங்களா கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். இவரிடம், அம்ரீஷ் மற்றும் இவரது கூட்டாளிகள், தங்களிடம் அரியவகை இரிடியம் உள்ளது. இதை மலேஷியாவில் உள்ள நிறுவனம் 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக உள்ளது. எங்களுக்கு, 26.20 கோடி ரூபாய் கொடுத்தால் போதும். மீதி தொகை முழுதையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என, நம்ப வைத்துள்ளனர்.
மேலும், தங்களிடம் இருப்பது அரியவகை இரிடியம் தான் என்பதை, கனடா ஆய்வகம் உறுதி செய்து சான்று அளித்து இருப்பதாக, ஆவணத்தை காட்டியுள்ளனர். இவரை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்று, தங்கள் கூட்டாளிகள் வாயிலாக, நட்சத்திர ஓட்டலில் அந்நாட்டு நிறுவன பிரதிநிதிகள், அரியவகை இரிடியத்தை, 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியது போல ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
இதை நம்பிய நெடுமாறன், அம்ரீஷ் மற்றும் இவரது கூட்டாளிகளிடம், 26.20 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், மலேஷிய நிறுவனத்திடம் இருந்து பணம் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நெடுமாறன், நடிகையின் மகனை நம்பி, கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்தது பற்றி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அம்ரீஷை பிடித்து, விசாரித்தனர். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, 26.20 கோடி ரூபாயை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அம்ரீஷை கைது செய்தனர்; கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.