சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் | மீண்டும் வெளியாகும் பாஸ் என்கிற பாஸ்கரன் | போதை பொருள் விளம்பரம் : ஷாருக்கான், அஜய் தேவ்கான் ஆஜராக நுகர்வோர் கமிஷன் உத்தரவு | ரசிகர் கன்னத்தில் பளார் விட்ட ராகினி |
சிம்பொனி இசை நிகழ்ச்சி 13 நாடுகளில் நடக்கும் என சென்னை திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தின் தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இசை அமைப்பாளர் இளைய ராஜா, 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசை அமைத்துள்ளார். இளையராஜா இயற்றிய மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான, 'வேலியன்ட்' சிம்பொனியை, லண்டனில் அரங்கேற்றி அசத்தினார். இன்று (மார்ச் 10) சென்னை திரும்பிய இளையராஜாவிற்கு விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛மிகவும் மகிழ்வான இதயத்தோடு, மலர்ந்த முகத்தோடு, நீங்கள் என்னை வழி அனுப்பி வைத்ததே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தான். இது சாதாரண விஷயம் அல்ல. சிம்பொனி நான்கு பகுதிகளை கொண்டது. நான்கு பகுதிகள் முடியும் வரை யாரும் கைதட்ட மாட்டார்கள் என்பது தான் விதிமுறை. ஆனால் நமது ரசிகர்ள் ஒவ்வொரு பகுதி முடியவும் கைதட்டினார்கள்.
13 நாடுகளில்...!
இந்த சிம்பொனி எல்லா இசை வல்லுநர்களாலும் பாராட்டுகளை பெற்றது. முதல்வரின் அரசு மரியாதை என்னை நெகிழ வைக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஆரம்பம் தான். இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி அரங்கேற்றப்பட உள்ளது. இந்தியாவிலும் அரங்கேற்றப்படும். அப்போது அமைதியாக இசையை ரசிக்கலாம். சிம்பொனியை யாரும் டவுன்லோடு செய்து கேட்க வேண்டாம்; ஏனென்றால் பயன்படுத்திய 80 வாத்தியக் கருவிகளின் இசையை உணர முடியாது.
இசைக்கடவுள்
என்னை கடவுள், இசைக்கடவுள் என்கிறார்கள். நான் சாதாரண மனிதனை போல தான் வேலை செய்கிறேன். என்னை இசைக்கடவுள் என்று சொல்லும்போது இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிவிட்டீர்கள் என்று தான் தோன்றும்.
வெறும் காலில் வந்தேன்
82 வயது ஆகியதால் இனிமேல் என்ன செய்ய போகிறார் என்று நினைக்காதீர்கள். எந்த விஷயத்திலும் நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் இல்லை. பண்ணைப்புரத்தில் இருந்து புறப்படும் போதும் வெறும் கால்களோடு நடந்தேன். இப்போது இந்த இடத்தில் நிற்கிறேன். இளைஞர்கள் என்னை முன் உதாரணமாக வைத்து கொண்டு அவர்களது துறையில் மென்மேலும் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு இளையராஜா பேசினார்.