22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தமிழ் திரையிசைக் கவிஞர்களில் தலைசிறந்த கவிஞராக பார்க்கப்படும் கவியரசர் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள் என்பது காட்சிக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்பதையும் தாண்டி, கால எல்லைக்குள் கட்டுப்பட்டு வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வியலோடு தொடர்புடைய பாடல்களாக இருந்ததால்தான் அவை காலம் கடந்து, இன்றும் நம்மால் போற்றப்படும் காவியப் பாடல்களாக நிலைத்து நிற்கின்றன.
தமிழ் இலக்கியம் அறியாதவர் கூட, இவரது பாடல்களைக் கேட்டால் இலக்கிய ஞானம் பெற்றுவிடும் அளவிற்கு, எளிய சொல்லாடலோடு, இலக்கியத்தின் சாரத்தை நம் இதயத்தில் இறக்கிவிடும் வல்லமை பெற்ற பாடல்களைத் தந்த ஒரு திரையிசைச் சித்தராகத்தான் காண்கிறது தமிழ் கூறும் நல்லுலகம். மெனக்கெடல் ஏதுமின்றி சொடுக்குப் போடும் நேரத்தில் மிடுக்கான பாடல்களைத் தருவதென்பது இவருக்கு கைவந்த கலை. அப்படி ஒரு பாடல் உருவானதைத்தான் நாம் இங்கே காண இருக்கின்றோம்.
1964ம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் கதை, வசனம் எழுதி தயாரித்திருந்ததோடு, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “கறுப்பு பணம்” திரைப்படத்தில், ஒரு நடிகை நடனமாடும் காட்சிக்கான பாடலை எழுத இசையமைப்பாளர் விஸ்வநாதன்-ராமமூர்த்தியுடன் அமர்ந்து பாடலை எழுதத் தொடங்கினார். “கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி, கைதட்ட ஆளிருந்தால் காக்கை கூட நடிகனடி” என்று கவிஞரிடமிருந்து பாடலின் பல்லவி பிறந்தது. பல்லவியை சொல்லிக் கொண்டிருந்தபோதே, வேறு ஒரு அவசர வேலை குறுக்கிட்டதால் எழுந்து வெளியே சென்று விட்டார் கவிஞர். வெளியே செல்லும் கவிஞரைக் கண்ட படத்தின் தயாரிப்பு நிர்வாகி, பாட்டை எழுதி முடித்துவிட்டதாக நினைத்து மறுநாளே பாடல் பதிவிற்கான கால்ஷீட்டையும் போட்டுவிட்டார்.
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் உட்பட இசைக்குழுவினர் அனைவரும் வந்து சேர்ந்துவிட, பாடல் எங்கே என்று கேட்டபோதுதான் பாடல் பல்லவியோடு நிற்பது தெரியவந்தது. உடனே தயாரிப்பு நிர்வாகி கவிஞரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச, ''ஆமா! ஞாபகம் வருது. பல்லவி மட்டும்தானே எழுதினேன்? கால்ஷீட் போட்டுட்டீங்களா? பரவாயில்லை, பல்லவியை படிங்க'' என கவிஞர் சொல்ல, தயாரிப்பு நிர்வாகி தொலைபேசியிலேயே படித்துக் காட்ட, அடுத்த வினாடியே கவிஞர் தொலைபேசியிலேயே பாடலின் மீதி வரிகளைச் சொன்னார்.
“பொய்யிலே நீந்தி வந்தால் புளுகனெல்லாம் தலைவனடி, பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி” என்று ஆரம்பித்து மொத்தப் பாடலையும் தொலைபேசியிலேயே சொல்லி முடித்தார் கவியரசர் கண்ணதாசன். தமிழ் திரையுலக வரலாற்றில் தொலைபேசியிலேயே பாடல் சொல்லப்பட்டு பதிவாகியது அதுதான் முதல் முறை. அதற்கு முன்பும் அப்படிப்பட்ட சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை. அதற்குப் பின்பும் யாரும் நிகழ்த்தியதுமில்லை. அதனால்தான் கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் காலத்தை வென்று நிற்கும் காவியப் பாடல்களாக என்றென்றும் நிலைத்திருக்கின்றன.