30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு |
புதுமுக இயக்குநர், புதுமுக தயாரிப்பாளர், புதுமுக இசையமைப்பாளர், புதுமுக பாடலாசிரியர், புதுமுக நட்சத்திரங்கள் என முற்றிலும் புதுமுகங்களாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்து, ஓர் புரட்சியை உண்டு பண்ணிய புதுமைச் சித்திரம்தான் “ஒருதலை ராகம்”. இத்திரைப்படம் வெளிவந்த பின்புதான், ஒருதலைப்பட்சமான, வெளிப்படுத்த இயலாத காதலை கருவாகக் கொண்டு தமிழில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. டி ராஜேந்தர் என்ற பன்முகத் திரைக் கலைஞரின் எண்ணத்தில் உருவான இவ்வண்ணத்திரைக் காவியம், மயிலாடுதுறையில் அவர் படித்த ஏ வி சி கல்லூரியில்தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டு படமாக்கப்பட்டது.
1980ல் வெளிவந்த இத்திரைப்படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. பின்னர் 33 வாரங்கள் வரை சில திரையரங்குகளில் காலைக் காட்சிகளாகவும், ஓரிரு திரையரங்குகளில் 365 நாள்கள் வரை ஓடியும் சாதனை புரிந்தது. படத்தை முதலில் வாங்க மறுத்த வினியோகஸ்தர்கள், 4 வாரம் படம் ஓடிய பின்னர் பெட்டி பெட்டியாகப் பணத்தை எடுத்துக் கொண்டு “மன்சூர் கிரியேஷன்ஸ்” தயாரிப்பாளரான இ எம் இப்ராஹிமிடம் ஓடிவந்து, மேல் விலை கொடுத்து ஏரியா உரிமை பெற்றுச் சென்ற அதிசயத்தையும் நிகழ்த்தியது இத்திரைப்படம்.
படத்தின் இயக்குநர் இ எம் இப்ராஹிம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், படத்தின் பெரும்பகுதியை இயக்கியிருந்தது டி ராஜேந்தர் என்பது பின்னாளில் வெளிவந்த அவரது திரைப்படங்களே உறுதி செய்தன. படத்தின் நாயகனான ஷங்கர் இப்படத்தின் வெற்றிக்குப் பின் “ஒருதலை ராகம்” சங்கர் என்றே அழைக்கப்பட்டார். “வாசமில்லா மலரிது”, “கடவுள் வாழும் கோயிலிலே”, “கூடையிலே கருவாடு”, “என் கதை முடியும் நேரமிது”, “மன்மதன் ரட்சிக்கணும்”, “இது குழந்தை பாடும் தாலாட்டு”, “நான் ஒரு ராசியில்லா ராஜா” என டி ராஜேந்தரின் இசையமைப்பில் அவரது கைவண்ணத்தில் உருவான அத்தனைப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அதிலும் குறிப்பாக “இது குழந்தை பாடும் தாலாட்டு” என்ற பாடலில் பாடல் முழுவதும் இயற்கையின் விதிகளுக்கு முரணானவற்றை நியாயப்படுத்தி, எழில்மிகு கவிதையாக்கித் தந்திருப்பார் டி ராஜேந்தர்.
1980 மே 2ல் வெளிவந்த இத்திரைப்படத்தின் இயக்குநர் யார்?, தயாரிப்பாளர் யார்?, இசையமைப்பாளர் யார்?, நாயகன், நாயகி யார்? என்ற விபரம் ஏதும் அறியாமலேயே வெளிவந்து, இமாலய சாதனை படைத்தது. நடிகர்கள் ஷங்கர், ரூபா, வாகை சந்திரசேகர், ரவீந்தர், தியாகு, உஷா, கைலாஷ்நாத் மற்றும் டி ராஜேந்தர் ஆகியோர் பின்னாளில் பெரிய நட்சத்திரங்களாக உருவாக காரணமாக இருந்து, அவர்களை அறிமுகப்படுத்தி, அழகு பார்த்த திரைப்படம்தான் இந்த “ஒருதலை ராகம்”.