ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
கர்நாடகத்தை சேர்ந்த பிரபல புல்லாங்குழல் இசை கலைஞர் அஷ்வினி கவுசிக். இவர் கடந்த சில நாட்களாக இளையராஜாவுடன் ஒரு படத்தின் பின்னணி இசைக்காக இணைந்து பணிபுரிந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசைஞானியின் புதிய ஸ்டுடியோவில், ராஜா சாருடன் 3 நாட்கள் பணியாற்றினேன். அனைத்தும் அற்புதமான புதிய அனுபவமாக இருந்தது. இப்படி ஒரு அனுபவம் இதுவரை என் வாழ்நாளில் கிடைத்ததேயில்லை. ராஜா சாருடன் பணிபுரிந்த ஒவ்வொரு இசைக்கலைஞரும் ஏன் அவரைப் பற்றி இவ்வளவு பயபக்தியுடன் பேசுகிறார்கள் என்பது எனக்கு இப்போது புரிகிறது.
ஒரு நொடி கூட யோசிக்காமல் உடனடியாக புதிய இசைக் குறியீடுகளை அவர் இயற்றிக் கொடுக்கும் மாய வித்தையை நான் நேரில் பார்த்தேன். அவர் எழுதித்தந்த ஸ்வரங்களை வாசிக்கும் பேறு எனக்குக் கிட்டியது. என் கனவு நனவாகியது, அவர் செவிகளில் இருந்து எதுவும் தப்பிவிடமுடியாது. ஒவ்வொரு இசைக்கருவியின் நுட்பமான இயல்பும், நுணுக்கங்களும், அவற்றை வாசிக்கும் இசைக்கலைஞரின் வாசிப்பும் அவருக்குத் தெரியும்.
தான் எழுதும் ஒவ்வொரு ஸ்வரத்தையும் எப்படி வாசிக்க வேண்டும், அது எப்படி இருக்க வேண்டும் என்று இசைக்கலைஞருக்கு அவர் கற்பிக்கிறார். அப்படி ஒரு நேர்த்தியான இசையுலகில் நாம் முற்றிலும் விழுந்து தொலைந்து போய், அந்நாளின் இறுதியில், நாம் வாசித்த முழு வடிவத்தின் அமைப்பைக் கேட்கும்போது, அவ்வுணர்வு நம்மை ஓர் இன்ப மயக்கத்தில் வீழ்த்திச் செல்கிறது.
நான் வாசித்த இசைக்குறிப்புகள், மற்றவர்கள் வாசித்த அதன் பதிலிணைப்பு பகுதிகள், காட்சிக்குத் தேவையான உணர்வுகள் அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் அவர் கம்போஸ் செய்து முடித்தவை என்று எண்ணும்போது சிலிர்க்கிறது. கிட்டத்தட்ட 40 மணி நேரம் நாங்கள் ரெக்கார்டிங்கில் இருந்தோம், அப்படி வேலை செய்த அந்த 40 மணி நேரத்திலும், அவரிடம் கண்ட மற்றொரு வியப்பிற்குரிய விஷயம். நாங்கள் வேலை செய்த இசைக்கு சம்பந்தமில்லாத விஷயத்தையும் ஏதாவது ஒரு நிமிடத்தில் கூட அவர் பேசி நாங்கள் கேட்கவில்லை.
அவருடைய இசைக்கூடத்தில் இருந்த மிகவும் திறமையும் அனுபவமும் வாய்ந்த இசைக்கலைஞர்களுடன் இசைத்தது மற்றோர் ஆனந்தம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மூன்று நாட்களும் ராஜா சார் என்னுடன் கன்னடத்தில் பேசியதைக் கேட்கும் அனுபவம் கிட்டியது பேரானந்தம். இன்று ஒரு வார்த்தைக்கு மிகவும் சரியான மற்றும் பொருத்தமான பயன்பாட்டைக் கண்டேன், அதுதான் தெய்வீகம்.
இவ்வாறு எழுதியிருக்கிறார்.