தமிழ் சினிமாவில் இளம் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். தனுஷின் மாமியார் லதா ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர். அதன் காரணமாக தான் கதாநாயகனாக நடித்த, தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' படத்தில் அனிருத்தை இசையைமப்பாளராக அறிமுகம் செய்தார்.
அப்படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் பட வெளியீட்டிற்கு முன்பு வெளியாகி வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று அனிருத்திற்கும் சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்தது.
அதன்பின் தனுஷ், அனிருத் கூட்டணி இணைந்து 'வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன்' ஆகிய படங்களில் பாடல்களால் பேசப்பட்டது. 2015ல் வெளிவந்த 'தங்கமகன்' படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து படம் செய்யவில்லை.
'மாரி 2' படத்தில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜாவுடன் மீண்டும் இணைந்தார் தனுஷ். அப்படத்தில் இடம் பெற்ற 'ரௌடி பேபி' பாடல் தாறுமாறாக ஹிட்டாகி தற்போது யு டியூபில் 1200 மில்லியனைக் கடந்துள்ளது.
'தங்கமகன்' படத்திற்குப் பிறகு சந்தோஷ் நாராயணனுடன் 'கொடி, வட சென்னை, கர்ணன், ஜகமே தந்திரம்' படங்களிலும், இமானுடன் 'தொடரி', ஷான் ரோல்டன் உடன் 'பா பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2', டர்புகா சிவா உடன் 'எனை நோக்கி பாயும் தோட்டா', விவேக் மெர்வின் உடன் 'பட்டாஸ்' என 10 படங்களில் அனிருத்துடன் தனுஷ் இணையவேயில்லை.
இப்போது 5 வருடங்களுக்குப் பிறகு, 10 படங்களுக்குப் பிறகு நேற்று அறிவிக்கப்பட்ட 'திருச்சிற்றம்பலம்' படத்தின் மூலம் மீண்டும் இணைகின்றனர். 'DNA' கூட்டணி என்றழைக்கப்படும் இக் கூட்டணி மீண்டும் இணைவதற்கு இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.