அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி | கல்லீரல் பிரச்னை: சனா ஆஸ்பத்திரியில் அட்மிட் | பிளாஷ்பேக் : ஹிந்தியில் ரீமேக் ஆன சிவகுமார் படம் | பிளாஷ்பேக் : மேற்கத்திய நடனங்களிலும் கலக்கிய லலிதா, பத்மினி | ஹீரோயின் ஆனார் முல்லை அரசி | வாரிசு: ஜீ தமிழில் புதிய தொடர் | முன்னோட்ட வீடியோவுடன் வருகிறது சிம்பு - வெற்றிமாறன் பட அறிவிப்பு | டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'புஷ்பா 2' | முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா |
ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது என்பது அத்திரைப்படத்தின் கதை, இயக்கம், திரைக்கதை, என்று காரணிகள் பல சொல்லப்பட்டு வந்தாலும், மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்ப்பது அத்திரைப்படத்தின் பாடல்கள். பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் பல உண்டு. அப்படிப்பட்ட பாடல்கள் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்படுபவர் எம் ஜி ஆர். பெரும்பாலும் தனது படங்களில் இடம் பெறும் பாடல்கள் கருத்துச் செரிவுள்ள எளிய சொல்லாடலோடு கூடிய இனிய இசைவார்ப்பாக இருக்க வேண்டும் என்பதில் தீர்க்கமான எண்ணம் கொண்டவராக இருப்பவர்தான் எம் ஜி ஆர்.
பேசத் தெரிந்த இரண்டு வயது குழந்தை கூட, அவரது பாடல்களைக் கேட்ட உடனே பாடும் வகையில் தனது அத்தனைப் பாடல்களின் பல்லவியும் எளிமையாக இருக்கும் வகையில் கவிஞர்களிடம் கேட்டுப் பெற்று வெற்றி கண்டவர். “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”, “நான் ஆணையிட்டால்”, “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்”, “திருடாதே பாப்பா திருடாதே”, “தூங்காதே தம்பி தூங்காதே”, “சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா” என்று சோர்வென்ற ஒன்றை நீக்கி, சுறுசுறுப்பென்ற ரத்தம் பாய்ச்சும் விதமாக, தன்னம்பிக்கை என்ற ஊட்டச்சத்தை தரும் விதமாக, ஒரு ஒளிமயமான எதிர்காலம் நமக்கு உண்டு என்பதை உணர்த்தும் வண்ணம் பாடல்களை அமைத்து வெற்றி கண்ட எம் ஜி ஆர், தனது “தலைவன்” படப்பாடல் ஒன்றில் அவருக்கிருந்த அதிருப்தியை வெளிப்படுத்தி, ஆதங்கப்பட்டதைப் பற்றித்தான் நாம் இங்கே காண இருக்கின்றோம்.
1970ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்து, பி ஏ தாமஸ் மற்றும் சிங்கமுத்து இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான் “தலைவன்”. 1968ம் ஆண்டு பூஜை போட்டு, ஆரம்பிக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு எம் ஜி ஆர் பொருளாதார ரீதியாக உதவி செய்ததோடு மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையிலான கால்ஷீட்டுகளை வழங்கியிருந்தும், பூஜை போட்டு 18 மாதங்கள் ஆகிய நிலையிலும் படம் வெளிவருவதில் தாமதமேற்பட்டுக் கொண்டே இருக்க, பூஜை அன்று படப்பிடிப்பின் முதல் நாளில் பதிவு செய்யப்பட்ட கவிஞர் வாலியின் ஒரு பாடலான “நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில், 'தலைவன்' வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்” என்று எழுதியதை சுட்டிக்காட்டி, படத்தின் பெயர் “தலைவன்” மற்றும் தலைவன் இன்னும் வரவில்லை என்பது போல் “தலைவன் வாராமல் காத்திருந்தாள்” என்று அறச்சொல் வந்ததால்தான் படம் வெளிவர இவ்வளவு தாமதம் ஏற்பட்டதாக தனது அதிருப்தியை கவிஞர் வாலியிடமே எம் ஜி ஆர் கூறி, ஆதங்கப்பட, எப்படியோ படம் 1970ல் வெளிவந்து, எம் ஜி ஆர் ஆதங்கப்பட்டது போலவே படம் தோல்வியைத் தழுவியது.
அறச் சொற்களாலான வார்த்தைகளை யாரேனும் பேசினாலோ அல்லது எழுதினாலோ அது நம் நிஜ வாழ்வில் நிச்சயம் நிகழ்ந்துவிடும் என்ற நம்பிக்கை நம் தமிழ் இலக்கியம் சார்ந்த ஒரு நம்பிக்கையாகவும் பார்க்கப்பட்டு வருகின்றது. எத்தனைப் பெரிய முற்போக்கு சிந்தனாவாதிகளாக இருந்தாலும் திரைத்துறையைப் பொறுத்தவரை, திரைக்கலைஞர்களோ, கவிஞர்களோ தங்களது படங்களில் வரும் பாடல்களில் அறச் சொல் ஏதும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இன்றும் இருந்து வருகின்றனர் என்பதற்கு ஒரு சிறிய சான்றாக பார்க்கலாம் இந்த “தலைவன்” படப்பாடலை.