தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சி அமைப்புக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பெப்சிக்கு போட்டியாக புதிய தொழிலாளார் சம்மேளனம் ஒன்றை தொடங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி கூறியதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் (பெப்சி) கடந்த 50 வருடங்களாக இணைந்து நல்லிணக்கத்துடன் செயல்பட்டு வந்தன. தற்போது தயாரிப்பாளர் சங்கம் மீது, பெப்சி ஒருவித விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
பாரம்பரியம் மிக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், அவர்களுடன் கைகோர்த்து செயல்பட்டு செயல்பட்டு வருகிறது. எனவே நாங்கள், 'தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு' என்ற புதிய சங்கத்தை தொடங்குகிறோம்.
இதன் மூலமாக சினிமா கனவுகளுடன் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம். பெப்சியில் சேர நுழைவுக் கட்டணமாக லட்சத்தில் பணம் கேட்பார்கள். ஆனால் எங்கள் புதிய அமைப்பில் நுழைவுக் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும். நாங்கள் தொடங்கியிருக்கும் புதிய அமைப்பு பாகுபாடின்றி செயல்படும். இனி துணை நடிகர்கள் அனைவரும், நடிகர் சங்கத்தில் இருந்தே தேர்வு செய்யப்படுவார்கள். என்றார்.