ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

இப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக இல்லாவிட்டால் அதனை மீம்ஸ் போட்டு ரசிகர்கள், குறிப்பாக இளைஞர்கள் கிண்டலும், கேலியும் செய்வார்கள். சமீபத்திய உதாரணமாக 'கங்குவா' படத்தை சொல்லலாம். ஆனால் செல்போன் உள்ளிட்ட நவீன வசதிகள் இல்லாத காலத்தில் ஒரு படத்தை எப்படி கிண்டல் செய்தார்கள் தெரியுமா?
நாடகங்களில் இடையிடையே படத்தை பற்றி கிண்டல் செய்வார்கள். குறிப்பாக கல்லூரிகளில் நடக்கும் ஆண்டு விழாவில் குறுநாடங்கள் நடத்தி கடுமையாக கிண்டல் செய்வார்கள். அப்படி ஒரு நிலை 'கஞ்சன்' என்ற படத்திற்கு வந்தது. கோவையைச் சேர்ந்த பிரபல தமிழ் அறிஞர், காங்கிரஸ் கட்சித் தொண்டர், ராஜாஜி மற்றும் காமராஜின் நெருங்கிய நண்பரான கோவை சி. அய்யாமுத்து ஒரு திரைப்படத்தை எடுக்க ஆர்வமாக இருந்தார். ஜூபிடர் பிக்சர்சில் எடிட்டர்களாக பணியாற்றிய எஸ்.கே.மொஹிதீன், அய்யாமுத்து ஆகியோர் இயக்கினார்கள்.
எஸ். வி. சுப்பையா, எம். என். நம்பியார், ஆர். மாலதி, டி. ஜி. கமலா தேவி, பி. வி. நரசிம்ம பாரதி, எம். முஸ்தபா மற்றும் எம். எஸ். எஸ். பாக்யம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பணக்காரா முதியவர் ஒருவர் தன் மகன் காதலிக்கும் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள விரும்பி, அவர்களின் காதலுக்கு எவ்வாறெல்லாம் இடையூறு செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
சிறிய பட்ஜெட்டில் தயாரான இந்த படம் பெரும் தோல்வி அடைந்ததுடன் கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. கோவையில் உள்ள ஒரு கல்லூரி ஒன்றின் ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் ஜூபிடர் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.ஏ.சாமி. அந்த விழாவில் மாணவர்கள் 'யம தர்பார்' என்ற நாடகம் ஒன்றை நடத்தினார்கள். பெரும் பாவங்கள் செய்த ஒருவன் எமலோகத்தில் விசாரிக்கப்படுகிறான். அவன் செய்த பாவத்திற்கு தண்டனையாக அவனை தீயிட்டு கொளுத்தலாமா, துண்டு துண்டாக வெட்டலாமா? என்று எமதர்மன், சித்தகுப்தனிடம் கேட்க, அதற்கு அவர் 'இதைவிட கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். பாவியை பூலோகத்திற்கு அனுப்பி 'கஞ்சன்' படத்தை ஒரே நாளில் 3 முறை பார்க்க வைக்க வேண்டும்' என்பார்.
அந்த பாவியோ 'எனக்கு அந்த கொடும் தண்டனை தராதீர்கள் என்னை எரித்து விடுங்கள், இல்லாவிட்டால் துண்டு துண்டாக வெட்டி வீசுங்கள்' என்று கதறுவார்.
இந்த நாடகத்தை பார்த்து கூட்டமே கைதட்டியது. எழுந்து நின்று நீண்ட நேரம் கைதட்டினார் எஸ்.ஏ.சாமி.