32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
சினிமா உலகில் உச்ச நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும் நாளில், இரண்டாம் நிலை நாயகர்களின் திரைப்படங்களையோ, அல்லது சிறு நடிகர்களின் திரைப்படங்களையோ வெளியீடு செய்வதை ஓரிரு வாரங்கள் தள்ளி வைத்து, பின்னர் ரிலீஸ் செய்வது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இன்று சில உச்ச நடிகர்களின் திரைப்படங்களே குறித்த நாளில் வெளியீடு செய்ய சுணக்கம் காட்டி வரும் நிலையையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.
இதுபோன்ற நிலை அன்றைய உச்ச நட்சத்திரங்களாக இருந்து வந்த எம் ஜி ஆர், சிவாஜி காலத்தில் அவ்வளவாக இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. காரணம் அக்கால சினிமா இயக்குனர்கள், கதாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் தங்கள் கதையின் நாயகனை நம்பியதை விட, கதையை பெரிதும் நம்பியவர்களாகவே இருந்தனர். அதற்கு சான்றுதான் நாம் காண இருக்கும் இந்த திரைப்படம்.
“திருவிளையாடல்”, “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “திருவருட்செல்வர்”, “திருமால் பெருமை”, “தில்லானா மோகனாம்பாள்” என பிரமாண்ட அரங்க அமைப்புகளோடு கூடிய, மிகப் பெரிய பட்ஜட் வண்ணத்திரைக் காவியங்களாக, நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து எண்ணற்ற புராண, இதிகாச மற்றும் சமூக திரைப்படங்களைத் தந்த இயக்குநர்தான் ஏ பி நாகராஜன். இவரால் பெரிய பட்ஜட் படம்தான் பண்ண முடியும் என்ற பேச்சு இருந்து வந்த அந்தக் காலத்தில், வெறும் 8 வயதே நிரம்பிய மாஸ்டர் பிரபாகர் என்ற ஒரு குழந்தை நட்சத்திரத்தை பிரதான கதாபாத்திரமாக வைத்து “வா ராஜா வா” என்ற பெயரில் ஒரு வண்ணத் திரைப்படத்தை தயாரித்து இயக்கிருந்தார்.
இதே காலகட்டத்தில் விஜயா வாஹிணி தயாரிப்பில் எம் ஜி ஆர் நடிப்பில் மிகப் பெரிய பட்ஜட் திரைப்படமாக வெளிவந்த “நம்நாடு” ஒரு புறமும், இயக்குநர் ஸ்ரீதரின் சித்ராலயா தயாரிப்பில் அவரது இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்து, முதன் முதலாக வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தி, அதிக பொருட் செலவில் தயாரித்திருந்த “சிவந்த மண்” திரைப்படம் மறுபுறமும் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த வேளையில், ஒரு குழந்தை நட்சத்திரத்தை வைத்து இயக்குநர் ஏ பி நாகராஜன், குறைந்த முதலீட்டில் தயாரித்து இயக்கியிருந்த “வா ராஜா வா” திரைப்படமும் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றிருந்தது.
அதுவரை பெரிய பட்ஜட் படங்களை மட்டுமே எடுக்கத் தெரிந்த இயக்குநராக கலையுலகினரால் பார்க்கப்பட்ட இயக்குநர் ஏ பி நாகராஜன், தன்னால் சிறிய பட்ஜட் படங்களை எடுத்தும் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருந்தார். 1969ம் ஆண்டு வெளிவந்த இந்த “வா ராஜா வா” திரைப்படம்தான் “ஆர்வோ” பிலிமில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமைக்கும் உரியதாயிருந்தது.