பொதுவாக ஒரு படத்தை கிண்டல் செய்தோ அல்லது அதற்கு எதிரான கதை கொண்ட படங்களை 'ஸ்பூப் வகை' படம் என்பார்கள். ஹாலிவுட் படங்களில் இதுபோன்ற கதைகள் வருவதுண்டு. ஆனால் தமிழில் அரிது.
மன்னர்களை வீரர்களாகவும், புத்திசாலிதனமானவர்களாகவும் சித்தரித்த கதைகளுக்கு இடையே மன்னரையே கோமாளியாக சித்தரித்த படம் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. பல தமிழ் படங்களின் கதைகளை கிண்டல் செய்து வந்த படம் மிர்சி சிவா நடித்த 'தமிழ் படம்'. இப்படி அவ்வப்போது நிகழும்.
அதேபோல 80 வருடங்களுக்கு முன்பு என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நாயகன், நாயகியாக நடித்த படம் 'சந்திரஹரி'. பொய்யே பேசாத ஹரிசந்திர மகாராஜா, நாடு, மனைவி, மக்களை இழந்த கதை திரைப்படங்களாக வந்து கொண்டிருந்தபோது, ஹரிச்சந்திரா என்கிற பெயரை திருப்பி போட்டால் வரும் 'சந்திரஹரி' என்ற பெயரில் படம் உருவானது.
முனிவர் ஒருவரிடம் 9 ஆயிரம் பொற்காசு இருக்கும், இன்னும் ஒரு ஆயிரம் பொற்காசு தாருங்கள் மன்னா என்னிடம் 10 ஆயிரம் பொற்காசுகளாகிவிடும் நான் நல்ல முறையில் வாழ்வேன் என்று அந்த முனிவர் சந்திரஹரியிடம் போய் நிற்பார், களஞ்சியத்தில் பொற்காசுகள் குவிந்து கிடகுக்கும் நிலையிலும் தன்னிடம் காசு இல்லை என்று பொய் சொல்வான் சந்திரஹரி. வாழ்க்கையில் உண்மையே பேசாமல் பொய்யை மட்டுமே பேசுகிற மன்னனை பற்றியது இந்த படம். பொய் பேசுவதால் அவன் பெற்றது என்ன? கற்றது என்ன என்பது படத்தின் திரைக்கதை.
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகத்தை அதே பெயரில் தயாரித்து, நடித்தார் என்.எஸ்.கிருஷ்ணன். இந்த படத்தை கே.எஸ்.மணி என்பவர் இயக்கினார். எல்.நாராயணராவ், காக்கா ராதாகிருஷ்ணன், கமலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் சிறிய படம் என்பதால் இத்துடன் 'இழந்த காதல்' என்ற பெரிய படம் இணைக்கப்பட்டது. இந்த படமும் நாடகத்தை தழுவி உருவானதுதான்.