கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
3 முறை தேசிய விருது வென்ற, 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு(வயது 73) உடல்நலக்குறைவால் காலமானார்.
உடல்நலக்குறைவால் நேற்று ஞாயிறு அன்று திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கபட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று(அக்., 11) நண்பகலில் அவரது உயிர் பிரிந்தது. சமீபத்தில் தான் கோவிட் தொற்றில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். இவரது மரணம் மலையாள திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய வேணு, சினிமா மீது உள்ள ஆர்வத்தால் நாடகங்களில் நடித்தார். பின்னர் 1978ல் வெளிவந்த தம்பு படம் அவரை பிரபலமாக்கியது. கிட்டத்தட்ட 500 படங்கள் வரை நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழில் மோகமுள், இந்தியன், அந்நியன், சிலம்பாட்டம், சர்வம் தாள மயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 3 முறை தேசிய விருது, 6 முறை மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்.
ஹீரோவாக நடிக்கும் ஆசையில் சினிமாவில் நுழைந்தாலும் ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடம் தனக்கு சரிவராது என உணர்ந்த நெடுமுடிவேணு கதையின் நாயகனாக குணச்சித்திர கதாபாத்திரமாக தன்னை மாற்றிக்கொண்டார். அதற்காக சிறுவயதிலேயே வயதான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அதனால் தானோ என்னவோ கிட்டத்தட்ட ஒரு வருட காலகட்டத்துக்குள்ளேயே ஒரே நடிகைக்கு காதலனாக, அப்பாவாக, தாத்தாவாக என அவரால் மூன்று விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிந்தது.
1986ல் வெளியான 'பொன்னும் குடத்தினும் பொட்டு' என்கிற படத்தில் நடிகை ரோகிணிக்கு ஜோடியாகவும் அதே வருடத்தில் வெளியான 'லவ் ஸ்டோரி' என்கிற படத்தில் அவரது தாத்தாவாகவும் 1987ல் வெளியான 'அச்சுவேட்டண்ட வீடு' படத்தில் அவரது அப்பாவாகவும் நடித்திருந்தார் நெடுமுடி வேணு. இது எந்த திரையுலகிலும் எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனை. மேலும் ஜீனத் அமன் நடித்த சவுராஹென் என்கிற ஆங்கில படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நெடுமுடி வேணு.
நடிகராக மட்டுமின்றி கட்டத்தே கிளிக்கூட்டு, தீர்த்தம், ஒரு கத ஒரு நுனக்கத உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் 1989ல் பூரம் என்கிற ஒரே ஒரு படத்தையும் இயக்கியுள்ளார் நெடுமுடி வேணு..
காவ்யதாளங்கள் என்கிற இசை ஆல்பத்திற்காக இருதல பட்சி என்கிற பாடலையும் பாடியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து இவர் பாடிய பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகவே, கேரளா போலீஸார் தங்களது அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் அவற்றை பகிர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து நடிகர்களுடனும் நல்ல நட்பில் இருந்து வந்தாலும் மோகன்லாலின் ஆஸ்தான நடிகராகவே எப்போதும் அறியப்பட்டார் நெடுமுடி வேணு. அந்தவகையில் அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் மோகன்லாலின் மரைக்கார் மற்றும் ஆராட்டு ஆகிய படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களால் மட்டுமல்ல திரையுலகினராலும் ஆராதிக்கப்பட்ட நெடுமுடி வேணு சினிமாவில் விட்டுச்சென்ற இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பதே உண்மை..