மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
சாமானியனாய் பிறந்து சாதனை நாயகனாய், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் மைந்தனாய், மனம் கவர் நாயகனாய், மங்கா புகழ் கொண்ட கட்சித் தலைவனாய் உருவெடுத்த “கேப்டன்” என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் ஆன மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் பிறந்த தினம் இன்று. அவரைப்பற்றிய சிறு தொகுப்பு...
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று, அழகர்சாமி நாயுடு மற்றும் ஆண்டாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார் நடிகர் விஜயகாந்த். இவரது இயற்பெயர் விஜயராஜ். பள்ளிப் படிப்பை தேவகோட்டையிலுள்ள டி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் மதுரையிலுள்ள நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
பத்தாம் வகுப்பு வரை படித்த நடிகர் விஜயகாந்த், அதன் பின் தனது தந்தையின் அரிசி ஆலையின் நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்தார். படிக்கும் பருவத்திலேயே இவருக்கு சினிமாவின் மீது ஈர்ப்பு இருந்ததால், சினிமாவில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்த இவருக்கு, 1978ம் ஆண்டு இயக்குநர் எம்ஏ காஜாவின் இயக்கத்தில் வெளிவந்த “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி தனது கலையுலக பயணத்தை ஆரம்பித்தார்.
1980ல் வெளிவந்த “தூரத்து இடிமுழக்கம்” என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க முற்பட்டார். பின்னர் 1981ல் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த “சட்டம் ஒரு இருட்டறை” என்ற திரைப்படம் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு மிகப் பெரிய திருப்பத்தையும், மாற்றத்தையும் தந்தது. தொடர்ந்து தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தேர்ந்தெடுத்து நடித்து பல வெற்றிப் படங்களை தந்தார் நடிகர் விஜயகாந்த்.
குணச்சித்திர வேடமேற்று நடித்தும் தன்னால் வெற்றி பெறமுடியும் என்று நிரூபித்த திரைப்படம்தான் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் இவர் நடித்து 1984ம் ஆண்டு வெளிவந்த “வைதேகி காத்திருந்தாள்”. மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, விஜயகாந்தை வோறொரு பரிமாணத்தில் காண்பித்த திரைப்படமாகவும் அமைந்தது இத்திரைப்படம். தொடர்ந்து “அம்மன் கோவில் கிழக்காலே”, “தழுவாத கைகள்”, “ஊமை விழிகள்” என்று பேர் சொல்லும்படி இவருடைய படப் பட்டியலும் நீண்டது.
1991ல் ஆர்கே செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் “கேப்டன் பிரபாகரன்”. இத்திரைப்படம் விஜயகாந்தின் 100வது திரைப்படம் என்ற அந்தஸ்தோடு வந்ததோடு மட்டுமின்றி, இத்திரைப்படத்திற்குப் பின் இவரது ரசிகர்களும், தொண்டர்களும் இவரை அன்போடும், மரியாதையோடும் “கேப்டன்” என அழைக்கவும் ஆரம்பித்தனர்.
சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, கடனில் மூழ்கியிருந்த நடிகர் சங்கத்தை, இவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது மீட்டெடுத்த பெருமைக்குரியவராக திகழ்ந்தார். ஏறக்குறைய 35 வருடங்கள் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய விஜயகாந்த், 2005ல் செப்டம்பர் 14 அன்று தான் பிறந்த மதுரையில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தையும் துவக்கினார்.
2006ல் நடந்த சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அனேக இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்று தி.மு.க மற்றும் அ.தி.மு.க.,விற்கு அடுத்த தனிப்பெரும் கட்சியாக உருவானது. முதல் தேர்தலில் தனது முதல் களமாக விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட சுமார் 13000 ஓட்டுகள் அதிகம் பெற்று, வெற்றி வாகை சூடி சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த்.
2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 49 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்று, தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்தது. சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.,வுடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பிரதான எதிர்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
சினிமா, அரசியல் என்ற இரட்டை குதிரையில் துணிச்சலுடன் சவாரி செய்து 'வெற்றி' என்ற இலக்கை தொட்ட வெற்றி நாயகன் விஜயகாந் 2023, டிசம்பர் 28ம் தேதி காலமானார்.
விஜயகாந்தின் பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் நாமும் பெருமை கொள்வோம்.