32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
சிலம்பிலிருந்து சிதறும் முத்துக்களை போல சிரிப்புகளை சிதற விடும் இவர் இருக்கும் இடமே கலகலப்பாகி விடுகிறது. சினிமா இன்ஸ்டிடியூட் அமைந்துள்ள சென்னை தரமணியில் பிறந்ததாலோ என்னவோ இவரை சினிமாவும் இணைந்து கொண்டுள்ளது. பள்ளியில் படிக்கும் போதே டிவி, சமூக ஊடகங்களில் பிஸியாகி குறுகிய காலத்திலேயே எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அகல்யா வெங்கடேசன்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் பேசியது தான் இனி வருவது...
சென்னையில் சிறு வயதில் படப்பிடிப்புக்கு வரும் நடிகர்களை பார்க்க செல்வோம். ஒரு முறை ரஜினி வந்த போது ரசிகர்கள் ஆரவாரம் இப்போதும் கண்ணில் நிழலாடுகிறது. அப்போதே எனக்கு சினிமா ஆசை பற்றிக் கொண்டது.
டிகிரியில் விஸ்காம் படிப்பை தேர்வு செய்தேன். அப்பா வெங்கேடசனும், ஆசிரியரான அம்மா சித்ராவும் நான் பட்டம் பெற்றால் போதும் என எனது விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டினர். படிப்பை முடித்து தனியார் 'டிவி' சேனலில் பணி கிடைத்தது. தொகுப்பாளினியாக நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தேன். சமூக ஊடங்களில் ஆக்டிவ்வாக இருந்தேன். அதன் மூலம் சரவணன், தொட்டிஜெயா, கே 30, தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.
முத்தையா இயக்கி கவுதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தேன். ராட்சசி பட வாய்ப்பு வந்தது. மறுபடியும் சூரி ஜோடியாக சங்கத்தமிழன் படத்தில் நடித்தேன். தற்போது வெளியான 'ரொமான்ஸ் எமக்கு தொழில்' படத்தில் ஊர்வசியுடன் நடித்தேன். அவருடன் நடிக்க வேண்டும் என்ற என் கனவை அந்த படம் நனவாக்கி விட்டது. இத்தனை ஆண்டுகளில் நான் நடித்துள்ள அனைத்து படங்களுமே திரைக்கு வந்து விட்டது சந்தோஷத்தை தருகிறது.
கதையும், கேரக்டரும் மனதுக்கு பிடித்திருந்தால் மட்டுமே பட வாய்ப்புகளை ஏற்று கொள்வேன். படப்பிடிப்பு தளத்துக்கு பத்து நிமிடங்களுக்கு முன்கூட்டியே சென்று விடுவேன். இதனால் இயக்குனர், தயாரிப்பாளர் தரப்பில் நல்ல பெயர். கணவர் அருண்குமார் போலீஸ் எஸ்.ஐ.,. பிறந்த வீடும், புகுந்த வீடும் ஒத்துழைப்பும், ஊக்கமும் அளிப்பதால் தான் சினிமாவில் தொடர முடிகிறது. கூட்டு குடும்பமாக இருக்கிறோம். மாமியாரே எனக்கு பிடித்ததை சமைத்து விடுவார்.
பள்ளி நண்பர்களான மட்டுவார்குழழி, ஜெனிபர்ஸ்ரீ, சுரேஷ்பாபு, அரவிந்த்சங்கர் உற்சாகப்படுத்தி இன்றளவும் நட்பு பாராட்டி வருகின்றனர். ஓய்வு கிடைத்தால் சென்னை பெசன்ட்நகர் பீச்சுக்கு சென்று விடுவோம். நண்பர்கள் வட்டாரமும் ஆஜராகி விடும். ரூ.5 வைத்திருந்தாலும் சரி, ரூ.50 ஆயிரம் வைத்திருந்தாலும் சரி; பெசன்ட்நகர் பீச் தான் எங்கள் பேவரைட் டூரிஸ்ட் ஸ்பாட். கோயில்களுக்கும் அடிக்கடி செல்வேன். ஐயப்பசுவாமி எனது விருப்ப கடவுள்.
தற்போது மெட்ராஸ்காரன் படத்தில் நடித்ததுடன் எக்ஸ்கியூடிவ் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறேன். மூன்று படங்களில் நடித்து வருகிறேன். நடிப்புடன் புரடக் ஷன் சைடிலும் இறங்க ஆசை இருக்கிறது. படம் பார்க்க வருவோர் மகிழ்ச்சி கடலில் மிதக்குமளவு சிரிக்க வைக்கும் கேரக்டர்களில் நடிக்க ஆசை இருக்கிறது. நிஜத்தில் நான் ஹேப்பியான பொண்ணு என்றவாறு விடைபெற்றார்.