அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க 'வாடிவாசல்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த 2021ம் வருடம் ஜூலை மாதம் 16ம் தேதி அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார். சிசு செல்லப்பா எழுதிய நாவலை மையமாக வைத்து 'ஜல்லிக்கட்டு' பற்றிய படமாக அந்தப் படம் தயாராக உள்ளதாக சொல்லப்பட்டது. அதற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றையும் வாங்கி அதனுடன் பழகியும் வந்தார் சூர்யா. 2022ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அந்தக் காளையுடன் அவர் நடந்து சென்ற வீடியோவையும் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
அந்தப் படத்தின் அறிவிப்புக்குப் பிறகு சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகளும், குழப்பங்களும் இருந்து வந்தன. தனக்கு திருப்புமுனை தந்த பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தைத் தயாரித்து நடிக்க ஆரம்பித்து முதல் கட்டப் படப்பிடிப்புடன் அவற்றிலிருந்து விலகினார் சூர்யா. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து பின் அந்தப் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என்றார்கள். அதன்பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடிக்க ஆரம்பித்து படத்தையும் முடித்துவிட்டார் சூர்யா.
இப்போது சூர்யாவின் 45வது படமாக ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். அப்படி என்றால் 'வாடிவாசல்' படம் மேலும் தள்ளிப் போகும் என்பது சொல்லாமலேயே தெரிந்துவிடும். 'விடுதலை 2' படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் 'வாடிவாசல்' படத்தை ஆரம்பிப்பார் என்றும் சொன்னார்கள். அப்படம் முடிந்து டிசம்பர் மாதமும் வெளியாகப் போகிறது.
அதற்கடுத்து 'வாடிவாசல்' படத்தை இயக்க வெற்றிமாறன் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது பாலாஜி இயக்க உள்ள படத்திற்குப் போகிறார் சூர்யா. அதன் வேலைகள் முடிந்து அடுத்த ஆண்டு தீபாவளி சமயத்தில் வெளியாகலாம்.
எப்போது 'வாடிவாசல்' என்று பெயர் வைத்தார்களோ அதன் 'வாசல்' இன்னும் திறக்கப்படாமலேயே வாடிப் போய் உள்ளது.