Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“புரட்சிக் கலைஞர் முதல் எழுச்சி மிகு எதிர்க்கட்சித் தலைவர் வரை” : 'கேப்டன்' விஜயகாந்த் பிறந்தநாள் இன்று

25 ஆக, 2024 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Captain-Vijayakanths-birthday-today


1. “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்பதற்கிணங்க, சாமானியனாய் பிறந்து சரித்திரம் படைத்த சாதனை நாயகனாய், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் மைந்தனாய், மனம் கவர் நாயகனாய், மங்கா புகழ் கொண்ட கட்சித் தலைவனாய் உருவெடுத்த “கேப்டன்” விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்த தினம் இன்று…

2. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று, அழகர்சாமி நாயுடு மற்றும் ஆண்டாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார் நடிகர் விஜயகாந்த். இவரது இயற்பெயர் விஜயராஜ்.

3. தனது ஆரம்பகால பள்ளிப் படிப்பை தேவகோட்டையிலுள்ள டி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் மதுரையிலுள்ள நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.

4. பத்தாம் வகுப்பு வரை படித்த நடிகர் விஜயகாந்த், அதன் பின் தனது தந்தையின் அரிசி ஆலையின் நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்தார்.

5. படிக்கும் பருவத்திலேயே இவருக்கு சினிமாவின் மீது ஈர்ப்பு இருந்ததால், சினிமாவில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்த இவருக்கு, 1978ம் ஆண்டு இயக்குநர் எம் ஏ காஜா அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி தனது கலையுலக பயணத்தை ஆரம்பித்தார்.

6. அதன் பின் 1980ம் ஆண்டு வெளிவந்த “தூரத்து இடிமுழக்கம்” என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க முற்பட்டார் நடிகர் விஜயகாந்த்.

7. 1981ம் ஆண்டு இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த “சட்டம் ஒரு இருட்டறை” என்ற திரைப்படம் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு மிகப் பெரிய திருப்பத்தையும், மாற்றத்தையும் தந்த திரைப்படமாகவும் அமைந்தது.

8. இதனைத் தொடர்ந்து தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக காண்பிக்க நினைத்து அதற்கேற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பல வெற்றிப் படங்களை தந்தார் நடிகர் விஜயகாந்த்.

9. குணச்சித்திர வேடமேற்று நடித்தும் தன்னால் வெற்றி பெறமுடியும் என்று நிரூபித்த திரைப்படம்தான் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் இவர் நடித்து 1984ஆம் ஆண்டு வெளிவந்த “வைதேகி காத்திருந்தாள்”. மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, விஜயகாந்தை வோறொரு பரிமாணத்தில் காண்பித்த திரைப்படமாகவும் அமைந்தது இத்திரைப்படம்.

10. “வைதேகி காத்திருந்தாள்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “அம்மன் கோவில் கிழக்காலே”, “தழுவாத கைகள்”, “ஊமை விழிகள்” என்று பேர் சொல்லும்படி இவருடைய படப் பட்டியலும் நீண்டது.

11. 1991ம் ஆண்டு இயக்குநர் ஆர் கே செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் “கேப்டன் பிரபாகரன்”. இத்திரைப்படம் விஜயகாந்தின் 100வது திரைப்படம் என்ற அந்தஸ்தோடு வந்ததோடு மட்டுமின்றி, இத்திரைப்படத்திற்குப் பின் இவரது ரசிகர்களும், தொண்டர்களும் இவரை அன்போடும், மரியாதையோடும் “கேப்டன்” என அழைக்கவும் ஆரம்பித்தனர்.

12. சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, கடனில் மூழ்கியிருந்த நடிகர் சங்கத்தை, இவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது மீட்டெடுத்த பெருமைக்குரியவராகவும் பார்க்கப்படுபவர்தான் 'கேப்டன்' விஜயகாந்த்.

13. ஏறக்குறைய 35 வருடங்கள் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய “கேப்டன்” விஜயகாந்த், 2005ம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று தான் பிறந்த மதுரையில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தையும் துவக்கினார்.

14. 2006ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இவருடைய கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அனேக இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்று தி.மு.க மற்றும் அ.தி.மு.க.,விற்கு அடுத்த தனிப்பெரும் கட்சியாக உருவானது.

15. சந்தித்த முதல் தேர்தலில் தனது முதல் களமாக விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட சுமார் 13000 ஓட்டுகள் அதிகம் பெற்று, வெற்றி வாகை சூடி சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 'கேப்டன்' விஜயகாந்த்.

16. 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 49 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்று, தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்தது. சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.,வுடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பிரதான எதிர்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு வந்தார் 'கேப்டன்' விஜயகாந்த்.

17. சினிமா, அரசியல் என்ற இரட்டை குதிரையில் துணிச்சலுடன் சவாரி செய்து 'வெற்றி' என்ற இலக்கை தொட்ட வெற்றி நாயகன் 'கேப்டன்' விஜயகாந், கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவருக்கு திரையுலகம் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல், கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டு, நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது.

18. விஜயகாந்தின் பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் நாமும் பெருமை கொள்வோம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்ட பிரணிதா!கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்ட ... தனுஷ் படத்தின் ‛முதல் சிங்கிள்': அப்டேட் வெளியிட்ட ஜி.வி .பிரகாஷ் குமார்! தனுஷ் படத்தின் ‛முதல் சிங்கிள்': ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)