கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதுள்ள இரவு நேரக் கட்டுப்பாடுகளுடன், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நாளை முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமைக்கான முழு நேர ஊரடங்கு விதிக்கப்பட உள்ளது.
இதனிடையே, கொரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளார்களாம். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர்களை மூட உத்தரபு பிறப்பிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே, கடந்த சில நாட்களாக இரவு நேர ஊரடங்கு காரணமாக தினமும் மூன்று காட்சிகள் மட்டுமே நடக்கிறது. அதிலும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்பதால் தியேட்டர் வசூல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தியேட்டர்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது கடந்த வருடம் போலவே தியேட்டர்களையும், திரையுலகத்தையும் பெருமளவில் பாதிக்கும் வாய்ப்புள்ளது என திரையுலகத்தினல் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
கடந்த வருடம் கொரோனா பரவலின் போது மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் சுமார் 8 மாத காலம் மூடப்பட்டு நவம்பர் 10ம் தேதிதான் திறக்கப்பட்டது. கடந்த வருடத்தை விட இந்த வருடத் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் தியேட்டர்களை எத்தனை மாதங்கள் மூட வேண்டிய சூழல் வருமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள்.
ஏற்கெனவே, தியேட்டர்களுக்கு வரும் மக்கள் குறைந்து பலர் ஓடிடி தளங்களில் படங்களைப் பார்க்கப் பழகிவிட்டார்கள். இந்த வருடமும் தியேட்டர்கள் மூடப்பட்டால் ஓடிடி வெளியீடுகள் அதிகமாகும். தியேட்டர்களுக்குப் போய் படங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு வராமல் போய்விடும் என்றும் பயப்படுகிறார்கள்.