ஷண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், மந்த்ரா பேடி, சுரபி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் அடங்காதே . ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. பல வருடங்களாக இந்தப் படம் தயாரிப்பிலேயே இருக்கிறது. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் இந்தப் படத்தின் வெளியீடு பலமுறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தின் வன்முறையும் அரசுக்கு எதிரான கருத்துகளும் அதிகமாக இருப்பதாக கூறி மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. தற்போது மறு தணிக்கை குழுவினர் படத்திற்கு ஏகப்பட்ட கட்டுகள் கொடுத்து யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.
இது குறித்து இயக்குநர் ஷண்முகம் முத்துசுவாமி கூறியிருப்பதாவது: 5 ஆண்டுகால தொடர் போராட்டம். வழி நெடுகிலும் அள்ளி அணைத்து ஆரத்தழுவிய நண்பர்கள், தம்பிகள், அண்ணன்கள், தங்கைகள், சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி. திரைப்படத் தணிக்கைத் துறை படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பியது. தடைகளைப் பார்த்துப் பழகிய எமக்கு அதுவும் சவாலாக இல்லை. கணக்கிலடங்கா வெட்டுகளுடன் அடங்காதே திரைப்படம். விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும். இவ்வாறு ஷண்முகம் முத்துசுவாமி தெரிவித்துள்ளார்.