ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கேம் சேஞ்ஜர் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற தவற தோல்வி படமாக அமைந்துவிட்டது. நான்கு வருடமாக இந்த படத்தை பார்த்து பார்த்து இயக்குனர் ஷங்கர் செதுக்கி வந்தார். ஆனாலும் இந்தியன் 2வை போல இந்த படமும் அவருக்கு கை கொடுக்க தவறிவிட்டது.
அது மட்டுமல்ல இந்த படம் வெளியான மறுநாளே பைரசி நபர்களால் இணையதளத்திலும் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் கேபிள் டிவி சேனலில் இந்த படத்தை முறையான அனுமதி இன்றி திருட்டுத்தனமாக ஒளிபரப்பி உள்ளனர். இப்படி லோக்கல் சேனலிலேயே இந்த படத்தை ஒளிபரப்பிய நிகழ்வு தெலுங்கு திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காப்பி ரைட் பாதுகாப்பு உரிமை துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் என இரு தரப்பினரும் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அதிரடி ரெய்டு நடத்தினார்கள். இதில் அப்பள ராஜு என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்த சாதனங்கள் அனைத்தும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.