அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் |
எல்லா முன்னணி இசை அமைப்பாளர்களும் “நான் தன்ராஜ் மாஸ்டரிடம் இசை கற்றேன்” என்று பேட்டி கொடுப்பார்கள். ஆனால் அந்த தன்ராஜ் மாஸ்டருக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது பெரிய கேள்விக்குறி. தன் வாழ்நாட்களின் பெரும் பகுதியை சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள 'சாய் லாட்ஜில்' ஒரு அறையில்தான் வாழ்ந்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், ஷியாம் என அனைவருமே அவரிடம் இசை கற்றவர்கள்தான். இசை அமைப்பாளர்களுக்கு எல்லாம் ஆசிரியராக இருந்த தன்ராஜ் மாஸ்டர், இசைப்பயிற்சிப் பள்ளி எதுவும் நடத்தவில்லை. ஆனால் அவர் தங்கியிருந்த மைலாப்பூர், லஸ் கார்னர் சாய் லாட்ஜ், அறை எண் 13க்கு வந்து போகாத கர்நாடக, மேற்கத்திய இசை மேதைகளும் இல்லை, இசை அமைப்பாளர்களும் இல்லை, ஆனால் அப்படிப்பட்ட இசை மேதை எதற்காக ஓட்டல் அறையில் தங்கி இருந்தார் என்பது யாருக்கும் விடை தெரியாத கேள்வி.
தன்ராஜ் மாஸ்டர் குறித்து ஒரு முறை இளையராஜா இப்படி குறிப்பிட்டார் “கிடார் இசையும், ட்ரம்ஸ் ஒலியும், பியானோவின் மெல்லோசைகளும் அவர் அறையில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தக் காலத்தில், திரை வாத்தியக் கலைஞர்கள் பலரும், அந்தப் படிகளில் எறியவர்கள்தான். அந்த வரிசையில் நானும் ஒருவன். சென்னையில் வாய்ப்பு தேடி, அவமானங்கள், அவமதிப்புகள், வறுமை, நெருக்கடி ஆகிய துன்பங்களுக்கு மத்தியில்தான் தன்ராஜ் மாஸ்டரை சந்தித்தேன். வருமானம் இல்லாத நிலையில் இருந்த என்னிடம் தன்ராஜ் மாஸ்டர் பணமே வாங்கவில்லை.
இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத்தந்தார். பியானோ கற்றுக் கொள்வதற்காக நான் அவரிடம் சேர்ந்தேன். எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர், அதைக் கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். வாரத்தில் இரண்டு நாள், இரண்டு மணி நேரம் பயிற்சி பெற சேர்ந்திருந்த நான், தினமும் வருகிறேன் என்றேன். சரி வா என்றார். 'ராசையா' என்ற பெயரை 'ராஜா' என்று மாற்றியவரும் தன்ராஜ் மாஸ்டர்தான். பின்னர் 'அன்னக்கிளி' படத்துக்கு இசை அமைக்கும் போதுதான், அதை 'இளையராஜா' என்று பஞ்சு அருணாசலம் மாற்றினார்” என்கிறார் இளையராஜா.
பலருக்கு இசை கற்றுக் கொடுத்ததுடன், வருங்கால தலைமுறையும் பயன் பெரும் வகையில் 'இசை வழி 180 டிகிரி', 'பிரம்ம மேள பிரமாணம்' என்ற இரு இசை நூல்களையும் எழுதியுள்ளார் தன்ராஜ் மாஸ்டர் . இவை இரண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
150 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியின் ஆசிரியரும், 28 முறை சிறந்த இசைப் பயிற்சி ஆசிரியர் விருதைப் பெற்றவருமான அப்துல் சத்தாரும், இளையராஜாவுடன் சேர்ந்து தன்ராஜ் மாஸ்டரிடம் இசைப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட இசை மேதையை திரையுலகம் மறந்ததுதான் பெரிய சோகம்.