அசத்துமா 'அஅ - அ' கூட்டணி? வெளியானது அறிவிப்பு | தமிழில் மற்ற மொழி நிறுவனங்களின் ஆதிக்கம் | வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் | தீபாவளி தினத்தில் சூர்யாவும், கார்த்தியும் நேரடியாக மோதிக் கொள்கிறார்களா? | 'விடாமுயற்சி'யை விட 'குட் பேட் அக்லி' குறைவான டிக்கெட் புக்கிங்! | நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம் | குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் | ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை |
ஒரு தெருக்கூத்து கலைஞனின் வாழ்க்கை, அவர் சந்திக்கும் பிரச்னையை அழகாக விளக்கி உள்ளனர் 'ஜமா' திரைப்படத்தில். இப்படத்தில் அப்பாவின் நாடக சபாவை மீட்க போராடுபவர் என்ற கதாபாத்திரத்தில் திறமையாக நடித்திருந்தார் நடிகரும் இயக்குனருமான பாரி இளவழகன். இப் படத்தை இவரே இயக்கி நடித்தது கூடுதல் சிறப்பு. சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் இந்தாண்டின் குறிப்பிடத்தக்க வெற்றி படங்களின் பட்டியலில் ஜமா படமும் இடம் பெற்றுள்ளது.
பாரி இளவழகன் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிபண்டார்பட்டு கிராமம் சொந்த ஊர். சென்னையில் பி.டெக்., படித்தேன். கல்லுாரி படிக்கும் போது சினிமா துறைக்கு வர வேண்டும் என விரும்பினேன். நடிகர் சிவகார்த்திகேயனை போல் வர வேண்டும் என்பது ஆசை. அதனால் ஆர்.ஜே., மற்றும் வி.ஜே.,வாக பல முயற்சிகள் செய்தேன்.
சிறுவயதில் இருந்தே பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். நடிகர் மைம் கோபியிடம் நடிப்பு பயிற்சி பெற்றேன். சினிமாவிற்கு செல்கிறேன் என கூறியபோது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. நடிக்க துவங்கிய பின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். இயக்குனர் சாய்பரத் இயக்கத்தில் வெளிவந்த ரம் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். நெருங்கிவா முத்தமிடாதே படத்தில் முதன்முதலாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து யானும் தீயவன், சென்னை பழனி மார்ஸ், காலா கதிர், ஜே பேபி படங்களில் நடித்துள்ளேன்.
எங்கள் பகுதியில் தெருகூத்துக்கள் அதிகம். அதனை சிறுவயதில் இருந்தே பார்ப்பது வழக்கம். தெருக்கூத்து கலையில் பெண் வேடமிடும் கலைஞர்களை பிறர் நடத்தும் விதம் தான் 'ஜமா' கதையின் அடித்தளம். இதற்காக 5 ஆண்டுகள் பல பகுதிகளில் ஆய்வு செய்தேன். முதலில் குறும்படமாக எடுக்க திட்டமிட்டேன். பிறகு தான் திரைப்படமானது.
தற்போது படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. படத்தை பார்த்து இயக்குனர் ராம் வாழ்த்தியது மறக்க முடியாதது. பாக்யராஜின் திரைக்கதை போல் எழுத வேண்டும் என நினைத்து தான் சினிமாவை கற்றுக்கொண்டேன்.
மணிரத்தினம், வெற்றி மாறன், ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரிடத்தில் இருந்தும் ஒன்று கற்றுக்கொண்டேன். இசையமைப்பாளர் இளையராஜாவிடம் படத்தின் சில காட்சிகளை படமாக்கி காட்டினோம். அதன் பின் படத்திற்கு இசை அமைத்தார். அவரிடம் பேச அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த வெற்றி அடுத்து என்ன கதை எழுத போகிறோம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணி துவங்கி உள்ளது என்றார்.