நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
தமிழில் “மூன்று பேர் மூன்று காதல், புதிய திருப்பங்கள், ஜெய் ஹிந்த் 2” ஆகிய படங்களில் நடித்தவர் சுர்வீன் சாவ்லா. ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். 2015ம் ஆண்டு அக்ஷய் தக்கர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியுள்ளார். சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் அவருக்கு ஏற்பட்ட 'கேஸ்டிங் கவுச்' பற்றி தொகுப்பாளர் கேட்டதற்கு தமிழில் தேசிய விருது பெற்ற இயக்குனர் ஒருவர் தனக்குக் கொடுத்த தொந்தரவு பற்றிப் பேசியுள்ளார்.
“தேசிய விருது பெற்ற இயக்குனர், தேசிய விருது பெற்ற நடிகர் ஒருவர் நடிக்கும் படத்திற்காக எனக்கு 'ஸ்க்ரீன் டெஸ்ட் செய்தார். அது 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. தமிழில்தான் அது இருந்தது. வசனத்தை மனப்பாடம் செய்து பேசி நடித்துக் காட்ட வேண்டும். உடை மாற்றம், நிறைய ரீடேக்குகள், தோற்றத்தில் மாற்றம் என நிறைய வேலை இருந்தது. அதன்பின் நான் மும்பை வந்துவிட்டேன். அப்போது எனக்குக் கடுமையான காய்ச்சல் வேறு.
இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஒரு அழைப்பு வந்தது. இயக்குனருக்கு ஹிந்தி, ஆங்கிலத்தில் பேசத் தெரியாது, தமிழ் மட்டுமே பேசத் தெரியும். அதனால், அவரது நண்பர் அவருக்கு உதவுவார், அவரை நான் 'பிம்ப்' என்றுதான் சொல்ல வேண்டும். அதைத்தான் அவர் செய்து கொண்டிருந்தார்.
என்னை அழைத்தவர் உடனே விஷயத்திற்கு நேராக வரவில்லை. என்னென்னமோ பேசிக் கொண்டிருந்தார். இயக்குனர் என்னுடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாக அவர் கூறினார். கடைசியாக, நானே நேரடியாக அவரிடம், 'இயக்குனர் என்னுடன் படுக்க விரும்புகிறாரா' என்று கேட்டுவிட்டேன். நீங்கள் தவறான இடத்தில் கதவைத் தட்டுகிறீர்கள் என்று சொன்னேன். இந்த வாய்ப்புக்காக நான் அதுபோன்று வேலை செய்ய மாட்டேன் என்றேன். இது போன்று எனக்கு ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல 20 முறை நடந்துள்ளது” என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
சுர்வீன் சாவ்லாவின் இந்த பேட்டி நேற்றுதான் யு டியுபில் வெளியாகி உள்ளது. அவர் குறிப்பிட்ட அந்த தேசிய விருது பெற்ற இயக்குனர் யார் என்ற பெயரை அவர் சொல்லவில்லை. இந்த விவகாரம் அந்தப் படத்தில் நடித்த தேசிய விருது பெற்ற நடிகருக்கும் தெரிந்திருக்குமா என்பதும் தெரியவில்லை.
தேசிய விருது பெற்றவர்கள் இப்படிப் பேசியுள்ளார்கள் என்பது தமிழ் சினிமாவிற்கு எவ்வளவு பெரிய அவமானம் ?.