அழகும், திறமையும் மட்டும் இருந்தால் போதாது சினிமாவில் ஜெயிக்க அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள். அது சுபிக்ஷாவுக்கு பொருந்தும். அழகு, திறமை இரண்டும் இருந்தும் இன்னும் சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறார்.
அன்னக்கொடி, கடுகு, கோலி சோடா 2, பொது நலன் கருதி, நேத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக 'வேட்டை நாய்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன்பிறகு கண்ணை நம்பாதே, சந்திரமுகி 2 படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தார்.
தற்போது 'சூரகன்' என்ற படத்தில் மீண்டும் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை தேர்ட் ஐ கிரியேஷன் சார்பில் கார்த்திகேயன் தயாரித்து, நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுபிக்ஷா நடிக்கிறார். பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி, ரேஷ்மா பசுபுலேட்டி, வினோதினி, சுரேஷ் மேனன், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
'அஹம் பிரம்மாஸ்மி' படத்தை இயக்கிய சதீஷ் குமார் இப்படத்தை இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது “தவறான முடிவால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் கண் முன்னால் ஒரு அக்கிரமம் நடக்கிறது. அதை தடுக்க அவரிடம் அதிகாரம் இல்லை. என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் அதை தடுக்க நினைக்கிறார். மற்ற அதிகாரிகள் அவரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி அவர் எப்படி அந்த தவறை தடுத்து நிறுத்தினார். இழந்த பதவியை எப்படி திரும்ப பெற்றார் என்பதுதான் கதை” என்றார்.