பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் |
தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலை தூக்கும் பிரச்னை தான் ஒரு படத்தின் பாடல்களுக்கான உரிமை இசையமைப்பாளருக்கு சொந்தமா தயாரிப்பாளருக்கு சொந்தமா என்பது. இதேபோன்று தற்போது மலையாள திரை உலகில் புதிய விவாதம் துவங்கியுள்ளது. மலையாள தயாரிப்பாளர் சங்கம் சார்பில், தயாரிப்பாளர்களின் நலன்களை காப்பதற்காக வரும் ஜூன் மாதம் முதல் புதிய படங்களை தயாரிக்காமல் ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பதை ஒரு புகாராகவே நடிகர் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு பெரிய சுமையாக இருப்பது இசையமைப்பாளர்களின் சம்பளம் மற்றும் பாடல்களின் காப்பிரைட் உரிமை ஆகியவைதான்.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் சில முக்கிய தயாரிப்பாளர்கள் கூறும்போது ஒரு படத்திற்கு இசையமைக்கும்போது இசையமைப்பாளருக்கு அதற்கான ஊதியத்தை கொடுத்து விடுகிறோம். பட ஆசிரியர், பாடகர் உள்ளிட்ட அனைவருக்குமே தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்கிறார். இப்படி தயாரிப்பாளர்களின் பணத்தில் உருவாகும் இசை பாடல்களாக வெளியாகும் போது அதற்கு இசையமைப்பாளர்கள் மட்டுமே எப்படி தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாட முடியும். இதனால் தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டிய நியாயமான லாபமும் கிடைக்காமல் போய் மிகப்பெரிய இழப்பும் ஏற்படுகிறது என்று கூற ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக இனிவரும் நாட்களில் இசையமைப்பாளர்களிடம் ஒன்று உங்களுக்கு படத்திற்கான சம்பளம் வேண்டுமா அல்லது சம்பளத்திற்கு பதிலாக உங்கள் பாடல்களின் இசையின் காப்பிரைட் உரிமை வேண்டுமா, இதில் ஏதோ ஒன்றை மட்டுமே நீங்கள் கேட்க முடியும் என்பது போன்று ஒரு புதிய விதிமுறையை கொண்டு வர முயற்சி நடப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு இசையமைப்பாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
குறிப்பாக பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசப்பச்சன் இது குறித்து கூறும்போது, “இசையமைப்பாளர்கள் தங்களுக்கு எது விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்வது அவர்களது உரிமை. ஆனால் இதில் ஏதோ ஒன்றைத்தான் நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என புதிய நிபந்தனையை விதிமுறையாக விதிக்க முடியாது. எல்லா இசையமைப்பாளர்களுக்கும் போதுமான அளவு ஊதியம் கொடுக்கப்படுவது இல்லை. அப்படியே கொடுக்கப்படும் ஊதியம் அந்த படத்தின் மொத்த இசைக்கும் ஒரு காண்ட்ராக்டாக பேசப்பட்டு தான் கொடுக்கப்படுகிறது. அதில் தான் இசையமைப்பாளர்கள் தங்களிடம் பணியாற்றும் இசை கலைஞர்களுக்கான ஊதியம், ஸ்டுடியோ வாடகை உள்ளிட்ட பல செலவுகளையும் செய்ய வேண்டி இருக்கிறது.
சில நேரங்களில் மூன்று பாடல்கள் என்று சொல்லிவிட்டு திடீரென ஆறு பாடல்களாக மாற்றுவார்கள். அதற்காக கூடுதலாக செலவாகும் நேரமும் அதற்காக கூடுதலாக பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் சம்பளம், ஸ்டுடியோ செலவு என அனைத்துமே ஏற்கனவே பேசப்பட்ட இசை அமைப்பாளரின் சம்பளத்தில் இருந்து தான் கொடுக்கப்பட வேண்டியிருக்கிறது. அப்படி பார்க்கும்போது இசையமைப்பாளர்களுக்கு மிஞ்சும் சம்பளம் மிகவும் சொற்பமே.
ஆனால் பாடல்களின் மூலம் பிரபல நிறுவனங்கள் அதற்கென ஒரு காப்பிரைட், ராயல்டி கொடுப்பதால் அதன் மூலம் வரும் தொகையை வைத்து தான் இசையமைப்பாளர்களின் வாழ்க்கை வண்டி ஏதோ ஓரளவுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. முந்தைய வருடங்களில் எல்லாம் ரவீந்திரன் மாஸ்டர், ஜான்சன் மாஸ்டர் போன்ற மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் பேங்க் பேலன்ஸ் என எதுவுமே இல்லாமல் இறந்தே போனார்கள். அப்படி ஒரு நிச்சயமற்ற தன்மை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இசையில் எங்களுக்கு காப்பிரைட் வேண்டுமென உரிமை கோருகிறோம்.
அதுமட்டுமல்ல நாங்கள் இசையமைக்கும் பாடல்களுக்கு தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுப்பது எதுவும் ஒரே நாளில் நடந்த நிகழ்வு அல்ல.. அத்தனை வருடங்களில் எங்கள் திறமை மூலம் நாங்கள் உருவாக்கி வைத்த அந்த அடையாளத்திற்கு கிடைக்கும் தொகை தான் இசைக்கான காப்பிரைட் உரிமை. இதை தயாரிப்பாளர்கள் தடை செய்யக்கூடாது” என்று கூறியுள்ளார்.
இப்படி தயாரிப்பாளர் சங்கம் நடிகர்களின் சம்பளம், இசையமைப்பாளர்களின் காப்பிரைட் உரிமை ஆகியவற்றில் கை வைக்கும் போக்கை துவங்கியிருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று மலையாளத் திரைகளை சேர்ந்தவர்கள் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.